Submitted by admin on Fri, 2009-12-11 22:55
Posted by: "subra manian"
ஓம்.
எஸ்.வையாபுரிப்பிள்ளையவர்கள் 25-09-1947-இல் எழுதுகிறார்:
நான் சிலகாலம் திருவனந்தபுரத்தில் வக்கீலாக இருந்தேன். ஆனால், தமிழ்
நூல்களை வாசித்துக் கொண்டிருப்பதுதான் பெரும்பாலும் என்வேலை. எனக்கு உற்ற
துணையாக இருந்தவர்கள்,ஸ்ரீ.கே.ஜி.சங்கர அய்யர் அவர்களும், கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளையவர்களும் ஆவர். ஒவ்வொரு நாளும் மாலையில் புத்தன்
சந்தையிலுள்ள சைவப் பிரகாச சபையில் நானும் வேறு நண்பர்களுமாகக்
கூடிக்காலம் போக்குவது வழக்கம். ஞாயிற்றுக் கிழமைகளில் திருக்குறள்
ஆராய்ச்சி நடைபெற்றுவரும். இந்தக் காலங்களில் ஆராய்ச்சி நடத்தற்குப்
பதிலாக, அடிக்கடி வாதப் பிரதிவாதங்களும், ஒரு சில சமயங்களில் வாதம் முற்றி
சண்டை சச்சரவுகளும் கூட நிகழும்.
1913-ஆம் வருடம் நவம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை: சுமார் 3 மணி
இருக்கும். சைவப் பிரகாச சபையில் நானும் நண்பர்களுமாக வழக்கம் போல்
திருக்குறள் ஆராய்ச்சி நடத்தக் கூடியிருந்தோம். வந்து சேரவேண்டியவர்களை
எதிர்பார்த்து எதிர்பார்த்துச் சிறிது சலிப்புற்றோம். யாரேனும்
வருகிறார்களா என்று வாசப்படியில் நின்று நான் எட்டிப்
பார்த்துக்கொண்டிருந்தேன். மாலைப் பொழுதாயினும், வெயில் கடுமையாய்த்தான்
இருந்தது.
அப்போது வாசல் நடையை அடுத்துள்ள பெரிய தெருவில் ஒருவர்
போய்க்கொண்டிருந்தார். சுமார் 35 வயது இருக்கலாம்; கம்பீரமான தோற்றம்;
நடுத்த்ரமான உயரம்; வீர புருஷனுக்குரியதொரு நடை; ஆவலுடன் எங்கும் கூர்ந்து
கவனிக்கும் அஞ்சாத பார்வை; புருஷ லக்ஷணமான மீசை.
வீதியில் போய்க் கொண்டிருந்தவர் 'சைவப் பிரகாச சபை' என்று தமிழில்
எழுதித் தொங்க்விடப்பட்ட பலகையையும் அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு
சிலரையும் பார்த்தார். மலையாளத் தலை நகரில் எங்கும் மலையாளமொழியிலேயே
இடங்கள், தெருக்கள் முதலியவற்றின் பெயர்கள் எழுதப் பட்டிருக்க, நகரின்
மத்தியில் தமிழெழுத்துக்கள் காணப்பட்டமை அவருக்கு ஆச்சரியத்தையும்
குதூகலத்தையும் விளைவித்திருக்கவேண்டும். திடீரெனச் சபையினுள்ளே
புகுந்தார். அங்கே நின்று கொண்டிருந்த என்னை நோக்கித் தாம் யாரென்று
தெரியுமா என்று கேட்டார். பாரதியாராக இருக்குமோ என்று சந்தேகித்தேன்.
ஆனாலும், திருவனந்தபுரத்திற்கு வரக் காரணமில்லையே' என்று நான் நினைத்து,
'தெரியவில்லையே' என்று சிறிது வருத்தத்துடன் சொன்னேன். தாமே 'சுப்பிரமணிய
பாரதி'-என்று தெரிவித்தார்.
என்னுடைய நெல்லை நண்பர்களுள், ஸ்ரீ வ. வேதநாயகம் பிள்ளையவர்களும்,
ஸ்ரீ சோமசுந்தர பாரதியார் அவர்களும் என்னிடத்தில் சுப்பிரமணிய பாரதியின்
அபாரமான கவித்வ சக்தியைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். பாரதியின்
உயிர்த் தத்துவம் நிரம்பிய பாடல்களை நானும் வாசித்து இன்புற்றிருக்கிறேன்.
ஆனால், அன்றுதான் அவரை நேரில் சந்தித்தது.
இன்னாரென்று தெரிந்ததும், எனக்கு இன்னது செய்வதென்று
புரியவில்லை. சிறிது நேரம் தயங்கி நின்றேன். பிறகு உள்ளே அழைத்துச் சென்று
உபசரித்தேன். அங்கே கூடி யிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்வித்தேன்.
அவர்களில் ஒரு சிலருக்கே பாரதியைக் குறித்துத் தெரியும்; தெரிந்த விஷயமும்
அவர் அரசாங்கத்தாரின் கவனத்துக்குரிய ஸர்க்கார்-விரோதி என்பது ஒன்றுதான்.
அவருடைய பலதிறப்பட்ட கவித்திறனும், அவருடைய பாடல்களும், மலைக்கு அப்பலுள்ள
அந்தப் பிரதேசத்தில் அக்காலத்தில் அவ்வளவாகத் தெரியாது.
பேசிக்கொண்டிருக்கும் பொதே ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது.
பாரதியாருக்கு தாகம் அதிகமாயிருக்கிறது என்பதைக் குறிப்பால் அறிந்தேன்.
உடனே 'ஐஸ்' இட்டு ஆரஞ்சு நீர் கொண்டுவரும்படியாக ஒருவனை அனுப்பினேன்.
இதைத் தெரிந்துகொண்டு,'தண்ணீர் போதுமானது' என்று அவர் கூறினார். அக்கம்
பக்கத்திலுள்ளவர்கள் பிராமணர் அல்லரென்று சொன்னேன். பாரதி கண்ணில் தோன்றிய
ஓர் அபூர்வமான ஜோதி என்னை வாட்டிற்று. தாம் அவ்வாறான சாதி வேறுபாடுகளைப்
பாராட்டுவதில்லையென்று சிறிது கடுமையாக எனக்குத் தெரிவித்தார்.
பார்ப்பானை ஐயர்ரென்ற காலமும் போச்சே
என்றும்,
எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே
என்றும் அவர் தமது சுதந்த்ரப் பள்ளிற் பாடியுள்ளமை எனக்கு ஞாபகத்திற்கு
வந்தது. முடிவில், நான் கொண்டு வரச் சொன்ன பானத்தையே உண்டு தாகசாந்தி
செய்துகொண்டார்.
அவருடைய பாட்டுகளை அவர் பாடிக் கேட்கவேண்டுமென்ற ஆவல் எனக்கு
அதிகமாயிருந்தது. அந்த ஆவலை நிறைவேற்றிக் கொள்ள இது தக்க சமயமென்று
எண்ணினேன்.
சின்னஞ்சிறு கிளியே-- கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்தே ---உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்.
என்று தொடங்கும் பாடல்களைப் பாடும்படி கேட்டுக்கொண்டேன். பாரதியார் கண்கள்
ஒரு நிமிடம் மூடுண்டன. முகத்திலே புதியததொரு பொலிவு, அன்பு ததும்பும்
சாரீரத்தில் பாடத் தொடங்கி எங்களைப் பரவசமாக்கினார்.
பின்னர் 'ஊழிக் கூத்து'ப் பாடலைப் பாடும்படி வேண்டினேன்.
இப்பொழுது நீண்ட நேரம் அவர் கண்கள் மூடியிருந்தன.; முகத்திலே ஒரு
துடிதுடிப்பு; சரீரம் முழுவதிலும் ஒரு வேகம். 'வெடிபடும் அண்டத் திடிபலத்
தாளம் போட' என்ற சொற்கள் கம்பீரத்தோடு வெளி வந்தன. ஒவ்வொரு சொல்லும்,
ஒவ்வோர் அடியும், அவரது ஆத்ம சக்தியினின்று பொருளும், ஆற்றலும் பெற்று,
எங்கள் மனக்கண்முன் கூத்தாடின. 'ஊழிக் கூத்தில் அகப்பட்டுவிட்டோம்!' என்ற
பீதி எங்களுக்கும் உண்டாயிற்று. சங்கீதத்தின் ஆற்றலை நான் அன்று உணர்ந்தது
போல் ஒருநாளும் உணர்ந்ததில்லை.
இதற்கப்புறம் பாரதியார் வெகு நேரம் தங்கவில்லை. அவர் ஒரு
பிரசங்கம் செய்வதற்கு இணங்கும் படி வேண்டினேன். ஏற்பாடு செய்தால், ஒத்துக்
கொள்ளலாமென்று எனக்குக் கூறினார். ஏற்பாடு செய்துகொண்டு அவருக்கு
அறிவிப்பதாகச் சொன்னேன். ஸ்ரீ.கே.ஜி. சேஷையர்ரவர்கள் வீட்டில் தாம்
இருப்பதாகவும், மறுநாள் திருவனந்தபுரத்தை விட்டுப் புறப்படத்
தீர்மானித்திருப் பதாகவும் தெரிவித்துச் சென்றார்.
பிரசங்கம் ஏற்பாடு செய்வதற்கு என் நண்பர்களோடு கலந்தேன்.
அவர்களில் பெரும்பாலோர் உத்தியோகஸ்தர்க ளானபடியால் இணங்கவில்லை. அவருள்
ஒருவர் எங்களைத் தெருவில் நிறுத்திக் கொண்டு, பிரசங்கத்தைப் பற்றி ஒரு
நீண்ட பிரசங்கம் செய்து முடித்தார். வெகு காலமாக அவருக்குப் பேச வசதி
கிடைக்கவில்லை. அன்று தமது ஆத்திரத்தையெல்லாம் தீர்த்துக்கொண்டார்.
பிரசங்கத்திற்கு ஏற்பாடு செய்ய முடியவில்லையென்பதை பாரதியாருக்குத்
தெரிவித்து விட்டேன்.
.
இதற்கு அப்புறம் பாரதியைக் காணும் பேறு எனக்குக் கிட்டவில்லை.
ஆனால்,அவருடைய திரு முகத்தை எண் கண்கள் மறக்கவில்லை. கம்பீரமும் ஆண்மையும்
அன்பும் நிரம்பிய அவருடைய சாரீரத்தை என் செவிகள் மறக்கவில்லை. அவருடைய
பாடல்களை என் மனம் என்றேனும் மறக்குமா? ஒரு தடவை பார்த்த எனக்கு இவ்வளவு
உணர்ச்சி தோன்றிவிட்டது, பாரதியாரோடு நீண்ட காலமாகத் தினந்தோறும் அவரை
மனத்தில் பூஜித்துவந்த நண்பர் கனகலிங்கம் உள்ளத்தில் எவ்வகையான
உணர்ச்சிகள் தோன்றியிருக்கவேண்டும் என்பதை நம்மால் அளவிட முடியாது.
பாரதியார் உண்மையான புரட்சி வீரர்.: பாரதி மண்டபக் கல்நாட்டு
விழாவில் ராஜாஜி தாம் புதுச்சேரியில் கண்ட பாரதியாரக் குறித்துப்
பேசுகையில், அங்கே அவர் வீட்டில் தாம் விருந்துண்டதாகவும், உண்ட பிறகு
சம்பாஷனைகளுக்கிடையே அவர் ஜாதியை அறிந்துகொள்ள விரும்பியதாகவும்
குறிப்பிட்டார். பாரதியார் தாம் பிராம்மணர் என்றதும் ராஜாஜி சிறிது
திகைத்து, 'பூணூலைக் காணோமே! என்று சொன்னாராம். அதற்கு பாரதியார்,'அதை ஏன்
பிரமாதப் படுத்துகிறீர்கள்?'' என்று பதில் சொல்லி விட்டாராம். அதே
பாரதியார், அதே புதுச்சேரியில் அரிஜன வகுப்பினரான திரு கனகலிங்கத்திற்கு
பூணூல் அணிவித்தார். பாரதியார் திரு கனகலிங்கத்தைப் பிராமணராக்கி விட்டதாக
ஊரெல்லாம் பிரமாதப் படவேண்டுமென்று விரும்பினார். அந்த உபநயன ஸம்ஸ்காரம்
நடைபெறும் போது பாரதியாரும் பூணூல் அணிந்துகொண்ட்ருந்தார். பூணூலை
எடுத்துவிட வேண்டாம் என்று அவருக்கு எச்சரிக்கை செய்துவிட்டு, அவர் போன
பின்னர் தம்முடைய பூணூலை எடுத்துவிட்டாராம்.
பக்தியை விதைத்துத் தமிழை வளர்த்து நாட்டை வாழ்வித்த
ஆழ்வார்--நாயன்மார்களைப் போல, பாரதியார் தேச பக்தியை விதைத்து தமிழை மறு
போகமாகய்ச் செழித்து வளரச் செய்து, தமிழர்களுக்கு புதியதோர் ஆனந்த
சுதந்திர வாழ்வுக்கும் வழிகாட்டினார்.இவர் பாடல்களைத் 'தேச-- உபநிஷதம்'
என்றும், 'அரசியல் கீதை' என்றும் போற்றுகிறோம்.
ஆதிப் பரம்பொருள் நாரணந்-தெளி
வாகிய பாற்கடல் மீதிலே--நல்ல
ஜோதிப் பணாமுடி ஆயிரம் கொண்ட
தொல்லறி வென்னுமோர் பாம்பின் மேல்--ஒரு
போதத் துயில்கொளும் நாயகன்-கலை
போந்து புவிமிசைத் தோன்றினான்.
.....................................பாஞ்சாலி சபதம்.
பாரதியார் பாரத ஜாதியை-- தமிழ் ஜாதியை- ஒன்றாக்க முயன்றார். அந்த
முயற்சிக்கு ஹரிஜனங்கள் மற்றவர்களோடு இரண்டறக் கலந்துவிடவேண்டும் என்று
அபிப்ராயப்பட்டார்.
'கங்கையிலே வந்து சேரும் வாய்க்கால்களெல்லாம் கங்கையாக
மாறிவிடும். பாரத தேசத்தில் வந்து குடியேறி தலைமுறை தலை முறையாக இங்கு
வாழ்பவர்கள் எல்லாம் நமது ஜனக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகின்றனர். பாரத
பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களையெல்லாம் பாரத
ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும். இது ஒரே ஜாதி, பிரிக்கமுடியாதது,
அழிவில்லாதது.
"என்குருநாதர் பாரதியார்"-- ரா கனகலிங்கம் எழுதிய நூலில் இருந்து.
வெ.சுப்பிரமணியன் ஓம்


